
சென்னை,
பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வழியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தபடி, 2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.
www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வு தேதியும் இன்றே அறிவிக்கப்பட உள்ளது.