
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவை சேர்க்க வேண்டுமென ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பந்துவீச்சைப் பொறுத்தவரை, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்கள் 2-வது போட்டியில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர். அவர் இந்த டெஸ்டில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். பும்ரா ஒரு நட்சத்திர வீரர். அவர் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்துகிறார். ஆனால் மற்ற மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்துவதற்கான கூடுதல் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்க வேண்டும்.
ஜடேஜா நான் நினைத்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக 2-வது இன்னிங்சில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நினைத்தேன். அவர் கொஞ்சம் நேராக பந்து வீசினார் என்று நான் நினைக்கிறேன். இந்தியா சிறிது காலமாக கூடுதல் பேட்டிங் அல்லது ஆழமாக பேட்டிங் வரிசையில் அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் வெற்றி பெற, நீங்கள் 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.