
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் இன்று ரத யாத்திரை தொடங்க உள்ளது. மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் குவிந்துள்ளனர்.
இன்று மாலையில் மூன்று ரதங்களும் புறப்பட உள்ள நிலையில், விழா சிறப்பாக நடைபெற வேண்டியும், பக்தர்களுக்கு அருளாசி கிடைக்க வேண்டியும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த திருவிழா மக்களுக்கு ஆனந்தத்தை கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
"பகவான் ஜெகநாதரின் ரத யாத்திரை நடைபெறும் புனிதமான இந்நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த புனித விழாவானது, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும். ஜெய் ஜெகநாதர்!" என மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பூரி நகரம் தவிர நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.