சூரிய பகவானின் அவதார தினமான ரத சப்தமி இன்று (4-2-2025) கொண்டாடப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. ரத சப்தமி நாளில் சூரியன் அவதரித்ததாக கருதப்படுவதாலும், இந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதாலும், இன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுவது விசேஷ பலனை தரும்.
ரத சப்தமி தினமான இன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும்.
ரத சப்தமி அன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
சூரியனுக்கு உகந்த இலை எருக்கம் இலை ஆகும். ரத சப்தமியான இன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இலை அடுக்கை, தலை மீது வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக, சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.
இன்றைய தினம் ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
இவ்வாறு குளித்து முடித்தபின் சூரியனை வழிபடுவதால் நம் பாவங்கள் விலகி புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம். சூரிய வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.
சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினத்தில் பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.