
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள ஆயிரத்து 540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20 தேதி வெளியிட்டது. இந்த குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் என 534 பணியிடங்கள் அடங்கும்.
அதேபோல் குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், 273 காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 5 லட்சத்து 81ஆயிரத்து 305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இதனபடி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 21 ஆயிரத்து 563 பேர் தாள் ஒன்று தமிழ் மொழி தகுதி தேர்வும், பொது அறிவு தேர்வும் எழுதுகின்றனர். மேலும் பொது தமிழ் தேர்வை 16ஆயிரத்து 457 பேரும், பொது ஆங்கில தேர்வை 5 ஆயிரத்து106 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 82 தேர்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற இருக்கும் நிலையில், தேர்வர்கள் தேர்வு தொடங்க அரை மணி நேரம் முன்பே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள தேர்வுக்கு 8.30மணிக்கே வரவேண்டும் என்றும் சலுகை நேரமாக 9 வரை வழங்கப்படும் என்றும், அதன்பிறகு தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பிற்பகல் 2.30 மணிக்கு நடக்க உள்ள தேர்வுக்கு பகல் 2 மணிக்கு பிறகு யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.