இந்தியாவை பற்றி சீனாவில் யூனுஸ் பரபரப்பு பேச்சு; மத்திய அரசு பதிலடி

1 day ago 2

புதுடெல்லி,

வங்காளதேச இடைக்கால அதிபர் மற்றும் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், சீனாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் அவர் பேசும்போது, இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்கள் நிலப்பரப்பால் சூழப்பட்டு உள்ளன. இந்திய பெருங்கடலை அடைவதற்கு அவர்களிடம் வழி கிடையாது.

நாங்கள் மட்டுமே பெருங்கடலின் ஒரே பாதுகாவலர் என பேசினார். வங்காளதேசம் வழியே ஆழ்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட சீனாவுக்கு அழைப்பு விடும் வகையில், இந்தியாவை பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் பொருட்களை உற்பத்தி செய்து சீனாவில் விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.

இதுபற்றி பிரதமர் மோடிக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் மற்றும் பொருளாதார நிபுணரான சஞ்சீவ் சன்யால் பேசும்போது, இந்தியாவின் உள்நாட்டு புவியியல் அமைப்பை பற்றி தூண்டும் வகையில் பேசுவதற்கான பின்னணி என்ன? என கேள்வி எழுப்பினார்.

வங்காளதேசத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும்போது, 7 இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பு பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.

இதேபோன்று வங்காளதேச முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி கூறும்போது, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என வலியுறுத்தியதுடன், யூனுஸ் தெரிவித்தவை அதிர்ச்சியளிக்கின்றன என்றார்.

இதுபோன்று பேசுவதற்கு அவருக்கு முற்றிலும் எந்தவித உரிமையும் இல்லை. வடகிழக்கு இந்தியாவில் இருந்து வங்காள விரிகுடாவுக்கு செல்வதற்கு வங்காளதேச அரசுடன் நெருங்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முறையான ஒப்பந்தங்கள் உள்ளன என்றார்.

வடகிழக்கு இந்தியாவுக்கு இணைப்புக்கான உரிமைகளை கொடுப்பதில் வங்காளதேசத்திற்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு ஈடாக பெற கூடிய உரிமைகளை அந்நாடு எதிர்பார்க்க கூடாது என்றும் கூறினார்.

இதேபோன்று, இந்தியாவின் பாதுகாப்பு நிபுணரான பிரவுல் பக்சி கூறும்போது, வங்காளதேச நாட்டை உருவாக்கியது இந்தியா. ஆனால் அதற்காக எந்தவித பலனையும் நாம் எடுத்து கொள்ளவில்லை. இந்தியாவின் 7 மாநிலங்களுடன் சீனாவை தொடர்புபடுத்தி, சிக்கல்களை உருவாக்கலாம் என யூனுஸ் நினைக்கிறார். அதனை சீனா ஏற்கெனவே செய்து வருகிறது.

சீனா மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் வடகிழக்குக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு முன்பே நடவடிக்கையில் இறங்கி விட்டது. இந்தியா என்ன செய்ய போகிறது என்பது யூனுசுக்கும் கூட நன்றாக தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

Read Entire Article