
லீட்ஸ் ,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் (137 ரன்கள்), ரிஷப் பண்ட் (118 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. ஜாக் கிராவ்லி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் டக்கெட் வேகமாக ரன் குவித்து வருகிறார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிக்கு தற்போது வரை பலன்கிட்டவில்லை. அபாரமாக ஆடி வரும் இந்த ஜோடி இங்கிலாந்து அணியை கம்பீரமாக வெற்றியை நோக்கி பயணிக்க வைத்து வருகிறது.
தற்போது வரை இங்கிலாந்து அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் அடித்துள்ளது. டக்கெட் 64 ரன்களுடனும், ஜாக் கிராவ்லி 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 254 ரன்கள் தேவைப்படும் நிலையில் கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளதால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.