
சென்னை,
மும்பையில் கடல்வழியாக புகுந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் வகையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன.
அந்த அடிப்படையில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் தமிழகத்தில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. தமிழக போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், கடற்படையினர், கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்துகிறார்கள்.
பயங்கரவாதிகள் வேடத்தில் கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் கடல் வழியாக ஊருடுவி வருவார்கள். அவர்களை போலீசார் கண்காணித்து மடக்கிப்பிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய அம்சம் ஆகும்.