
லார்ட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர்.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி வீரரான ஜோஷ் டங் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக ஆடி வரும் ஜோஷ் டங் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவரது காயம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கெனவே ஆர்ச்சர், அட்கின்சன் ஆகியோரும் காயம் காரணமாக இந்த அணியில் இடம்பெறாத நிலையில், ஜோஷ் டங்க்கும் காயத்தை சந்தித்துள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.