
புதுடெல்லி,
காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக அறிவித்தது.
சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவு, வணிகத்தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை மீறுவோம் என்றும், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் நுழைய தடை என்றும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது.
அதே நேரம் இந்திய எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடுகளை நடத்த தொடங்கினர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.கடந்த 2 தினங்களாக காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நவுஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கிச் சூடுகளை நடத்தியது. இந்திய ராணுவத்தினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போர் நிறுத்த பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல்களை நடத்தினர். இதற்கு இந்திய தரப்பு கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது.
இதனிடையே பாகிஸ்தான் மந்திரிகள் சிலர் இந்தியாவை மிரட்டும் தொனியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஏவுகணை ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தியாவும் அதற்கான எதிர்வினையாற்ற தயாராக உள்ளது. பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கும், இலக்குகளை தாக்குவதற்கும் முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்திய விமானப்படை நாளை (மே-7) முதல் 2 நாட்கள் பெரிய அளவிலான போர்ப்பயிற்சி மேற்கொள்ளும்படி, விமானப்படை வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
இந்திய விமானப்படை நாளை முதல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாலைவனப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போர்ப்பயிற்சியை மேற்கொள்ள உள்ளது. மே 7 ஆம் தேதி, இதில் ரபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 விமானங்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் பங்கேற்க உள்ளது.வழக்கமான தயார்நிலைப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தப் பயிற்சியில், ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை, முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும். போருக்கான தயார்நிலையின் ஒரு பகுதியாக, வான்வெளி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.