
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்ற பஹல்காம் படுகொலைக்கு இந்தியாவின் பதிலடியாக நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார்.
இந்திய தாக்குதல்களில் மசூத் அசாரின் 10 குடும்ப உறுப்பினர்கள், 4 உதவியாளர்கள் கொல்லப்பட்டதை பிபிசி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன்படி கொல்லப்பட்டவர்களில் மசூத் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடங்குவர் என்று ஜெய்ஷ் இ முகமது தலைவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்களை இன்று அதிகாலை 1.44 மணிக்கு இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது.
வெறும் 25 நிமிடங்களில், பாகிஸ்தானின் பல பெரிய பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்து, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.