டெல்லி: இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 3ல் ஒரு பங்கை இ.எம்.ஐ. செலுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நிதி தொழில்நுட்ப சேவைகள், வங்கி அல்லதா நிதி நிறுவனங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் 30 லட்சம் பேரிடம் ‘பி.டபிள்யு.சி.,’ மற்றும் ‘பெர்பியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்துள்ளன. இதில் இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 39% கடனை திரும்ப செலுத்தவும், காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்தவும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் வங்கி போன்ற முறையான வழிமுறைகளை காட்டிலும் நண்பர்கள், உறவினர்கள், வட்டி அல்லது அடகு கடைகளில் கடன் வாங்குவது தெரிய வந்திருக்கிறது. ஆரம்பநிலை பணியாளர்கள் தங்களது ஊதியத்தில் 35%யும், நீண்டகால பணியாளர்கள் 40%யும், நடுத்தர வருமானம் உடையவர்கள் 44%யும், அதிக வருமானம் பெறுபவர்கள் 46% தொகையையும் மாதாந்திர தவணையாக செலுத்துவது தனியார் நிறுவனங்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கட்டாய செலவுகளுக்கு 39% தொகையையும், தேவையான செலவுகளுக்கு 32%யும், விருப்ப செலவுக்கு 29% தொகையையும் இந்தியர்கள் செலவு செய்வதாக அந்நிறுவனங்கள் ஆய்வுகள் கூறுகின்றன. கடனை திருப்பி செலுத்துவது காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்துவது கட்டாய செலவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விருப்ப செலவில் பெரும்பாலான தொகை அதாவது ஆடை, அலங்கார பொருட்களுக்கு 63% செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங் 14%யும், உணவு ஆர்டர் செய்வதற்கு 13%யும், பொழுதுபோக்கிற்கு 3%யும், மது அருந்த 3%யும், பயணம் மேற்கொள்ள 1%யும், பிற செலவுகளுக்காக 3%யும் செலவு செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தேவையான செலவுகளுக்காக ஒதுக்கப்படும் தொகையில் குடிநீர் மற்றும் மிசாரத்திற்கு 30% தொகை செலவிடப்படுகிறது. அன்றாட தேவைகளுக்கு 18%யும், வீட்டு வாடகைக்கு 16%யும், மருந்துகளுக்கு 15%யும், எரிபொருளுக்கு 10%யும், பிற செலவுகளுக்கு 12%யும் இந்தியர்கள் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 3ல் ஒரு பங்கை EMI செலுத்துகின்றனர்: ஆய்வு வெளியான தகவல்! appeared first on Dinakaran.