
ரோம்,
ஐரோப்பிய நாடான இத்தாலியில் உருவான புதிய புயலால் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டஸ்கனி, எமிலியா ஆகிய பிராந்தியங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆர்னோ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின. சாலையில் சென்ற கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. போலோக்னா நகரில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.
ஆனால் வெள்ள அபாயம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இ்டங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி அங்கிருந்த மக்கள் வீட்டை காலி செய்து நிவாரண முகாம்களுக்கு சென்றனர்.
அதேபோல் புளோரன்ஸ், பிசா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதி கனமழைக்கான `ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. டஸ்கனி பிராந்தியத்தில் 60-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டன. எனவே அங்கு வசிக்கும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.