பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்

5 hours ago 5

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக வழிபடுவது வழக்கம். நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம்.

பங்குனி உத்திர நாளின் சிறப்புகள்:

1. மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது பங்குனி நாளில்தான். ஆண்டுதோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

2. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

3. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

4. மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

5. பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாள் பங்குனி உத்திரம். எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது.

6. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

7. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும்போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

8. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது.

9. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

10. பங்குனி உத்திரத் திருவிழா பலவேறு கோவில்களில் சிறப்பாக நடைபெறும். சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

11. பங்குனி உத்திர திருநாளில் அனுஷ்டிக்கப்படும் விரதம், கல்யாண விரதம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக் கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

12. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

13. பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.

14. பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் முருகப்பெருமான்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறும்.

15. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்தலாம்.

Read Entire Article