இதுவரை எந்த இந்திய வீரரும் படைத்திராத சாதனையை படைத்த ஹர்ஷித் ராணா

3 hours ago 1

நாக்பூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா, கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 4-வது போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தற்போது அறிமுகம் ஆன முதல் ஒருநாள் போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் 3 வடிவிலான போட்டிகளிலும் (டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 3 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.

இதற்கு முன் எந்த ஒரு இந்திய வீரரும் இப்படியொரு சாதனையை படைத்திராதது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article