இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?

1 day ago 3

பர்மிங்காம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் (82 ரன்கள்), பென் டக்கெட் (60 ரன்கள்), ஹாரி புரூக் (58 ரன்கள்) மற்றும் ஜோ ரூட் (57 ரன்கள்) ஆகிய 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 26.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article