ஆபரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு

1 day ago 6

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவர்கள் ஒரு சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டனர்.

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெளிவுப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 பேர் தலைமையிலான குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, இந்திய பிரதிநிதிகளாக அவர்கள் பல குழுக்களாக பிரிந்து சென்று அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழுவினரை பிரதமர் மோடி விரைவில் சந்திக்க உள்ளார். இதன்படி வருகிற 9-ந்தேதி அல்லது 10-ந்தேதி டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற கூடும் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, உயர்மட்ட கூட்டங்கள், உரையாடல்கள் மற்றும் பல்வேறு நாடுகளிடம் இருந்து கிடைத்த பதில்கள் உள்ளிட்ட முக்கிய முன்னேற்றத்திற்கான விசயங்களை பற்றி பிரதமரிடம் அந்த குழுவினர் விளக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, பா.ஜ.க. எம்.பி. பைஜெயந்த் பண்டா தலைமையிலான குழுவினர் நாளை மதியம் 2.30 மணியளவில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து, தங்களுடைய பயணம் பற்றி விளக்க உள்ளனர். இந்த குழுவினர் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.

Read Entire Article