இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் எடுத்த அதிரடி முடிவு

1 day ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.

இந்த தொடருக்கு முன்னதாக அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் கருண் நாயர், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் அடங்கிய இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சென்று இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 போட்டிகள் டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நேற்று தொடங்கியது.

இந்நிலையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி, இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2-வது ஆட்டத்தில் தான் விளையாட விரும்புவதாக  தேர்வுக்குழு தலைவரிடம் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அகர்கரும் அதற்கு அனுமதி அளித்ததாகவும் இதனால் கே.எல்.ராகுல் வரும் திங்களன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்று 2-வது போட்டியில் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும் வகையில் கே.எல். ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜூன் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

Read Entire Article