
மும்பை,
இந்திய கிரிக்கெட் அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அசத்தினால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பும்ரா விஷயத்தில் நான் மிகமிக கவனத்துடன் இருப்பேன். அவருக்கு ஒரே சமயத்தில் 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து பின்னர் இடைவெளி கொடுப்பேன். அந்த வகையில் நீங்கள் அவரை 4 போட்டிகளில் விளையாட வைக்கலாம். ஒருவேளை பும்ரா முதல் போட்டியிலேயே அபாரமாக பவுலிங் செய்தால் அவரை நீங்கள் 5 போட்டிகளிலும் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
ஆனால் அப்படி விளையாட வைத்தால்தான் அவருடைய உடல் பாதிப்பை சந்திக்கும். எனவே லேசான காயம் இருந்தாலும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்வதற்கான உரிமை பும்ராவுக்கு வழங்கப்பட வேண்டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக விளையாடினால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்" என்று கூறினார்.