ஆவடி மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டம்: கவுன்சிலர்கள் காரசார விவாதம்

3 weeks ago 5

ஆவடி: ஆவடி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நேற்று காலை மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்: 16வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி பேசுகையில், எங்களது வார்டில் 25 வருடங்களுக்கு முன்பு, கல்லில் கட்டப்பட்ட கால்வாய்தான் உள்ளது. எனவே புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்றார். 48வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் காமேஷ் பேசுகையில், பருத்திப்பட்டு – கோலடி சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை. அதை சரி செய்ய வேண்டும். வி.ஜி.என்.ராயல் பார்க் அருகே கட்டி முடிக்கப்பட்ட பூங்காவை விரைந்து திறக்க வேண்டும் என்றார்.

1வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் பேசுகையில், ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை, எங்கு பார்த்தாலும் கழிவுநீர்தான் ஓடுகிறது. 18 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது. பல இடங்களில் இன்னும் இணைப்பு கொடுக்கவில்லை என்றார். 6வது வார்டு கவுன்சிலர் பைரவி பேசுகையில், தி.மு.க., ஆட்சி வந்தபின்தான் அனைத்து இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் வார்டில் என்ன பிரச்னையோ அதை மட்டும்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் மொத்தம் 131 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post ஆவடி மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டம்: கவுன்சிலர்கள் காரசார விவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article