திருவள்ளூர்: ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும், சித்தியும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அருகே மோரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மனைவி சுகுணா இவர்களுக்கு சந்தோஷ் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. சுகுணா வழக்கம் போல் மோரை கிராமம் வழியாக செல்லும் கிருஷ்ணா கால்வாயில் துணி துவைக்க தனது 4 வயது குழந்தையுடன் சென்றுள்ளார். சுகுணா துணி துவைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மகன் சந்தோஷ் தண்ணீரில் தவறி விழுந்துள்ளான். இதனை கண்டு பதறிய சுகுணா குழந்தையை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார்.
குழந்தையை காப்பாற்ற தனது அக்கா தண்ணீரில் குதிப்பதை கண்ட சுகுணாவின் தங்கை அஞ்சனா என்பவரும் தண்ணீரில் குதித்தார். கால்வாயில் விழுந்த குழந்தையை அப்பகுதி வாசிகள் காப்பாற்றிய நிலையில் தாய் சுகுணா மற்றும் அவரது சகோதரி அஞ்சனா தண்ணீரில் 100 அடி தொலைவிற்கு அடித்து செல்லப்பட்ட இருவரையும் கால்வாயில் குளித்து கொண்டிருந்த பகுதி வாசிகள் மீட்டு தகவல் தெரிவித்தனர். இறந்த மாணவி அஞ்சனா நஸ்ஸிங் மாணவி என்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிருஷ்ணா கால்வாயில் துணி துவைக்க வந்த தாய் மற்றும் அவரது சகோதரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த குழந்தை: காப்பாற்ற முயன்ற இருவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.