நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உற்சாகமாக நிகழ்ச்சிகளில் பேசினார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அவரது வலைதள பதிவு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் வழிபாடு செய்தது குறித்து திருநெல்வேலியில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் அவர் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டு பேசும்போது, “திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரை வியாழக்கிழமை தரிசித்தேன். திருச்செந்தூருக்கு நான் வருவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பும் இங்கு முருகப் பெருமானை தரிசிக்க வந்தேன். திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கும், வைகுண்டருக்கும் பிரசித்தி பெற்றது. திருச்செந்தூருக்கு அய்யா வைகுண்டரை தரிசிக்க சென்றபோது கடல் அலைகளில் ஆன்மிக அதிர்வலைகளை உணர முடிந்தது” என்று தெரிவித்தார். தனது பேச்சின் தொடக்கத்திலும், இறுதியும் அய்யா உண்டு என்று தமிழில் அவர் குறிப்பிட்டது அய்யாவழி பக்தர்களை கவர்ந்தது.