
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று முன்தினம் இரவு முல்லான்பூரில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 9 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது.
ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆடி வரும் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. விராட் கோலி,கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தாலும் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதே தவிர கோப்பையை வெல்லவில்லை. அந்த மோசமான வரலாற்றை புதிய கேப்டன் ரஜத் படிதார் மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் தீவிர ரசிகரான பெங்களூருவை சேர்ந்த சிவானந்த் என்பவர், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "இந்த வருடம் பெங்களூரு அணி கோப்பையை வென்றால், அந்த நாளை 'ஆர்சிபி ரசிகர்களின் திருவிழா' என அதிகாரபூர்வமாக அறிவித்து, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். மாவட்டங்கள் தோறும் அந்த நாளில் ஒவ்வொரு வருடமும் கொண்டாட்டங்கள் நடக்க ஏதுவான சூழலையும் அரசு உருவாக்க வேண்டும். கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம், இதனால் ரசிகர்கள் ஒன்றுகூடி இந்த வரலாற்று தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.