
கரூர்,
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தர். அப்போது அமைச்சர் சிவசங்கர் கரூர்- மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டு இருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர்களிடம், ''உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு உங்களுக்கென்று குறிப்பிட்ட இடத்தை அரசு ஒதுக்கி இருக்கிறது. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்? உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு சென்றால் யார் பதில் சொல்வது?'' என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் அவர்களால் அமைச்சர் சிவசங்கரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அப்போது அவர்கள் ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? என்று அலட்சியமாக பதிலளித்தனர். உடனே அமைச்சர் சிரித்தவாறு, ''நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?'' என கேட்டார். ''நீங்க யாருன்னு தெரியலையே'' என டிரைவர் கூறினார்.அதற்கு அமைச்சர் சிவசங்கர், '' நான் போக்கு வரத்து துறை அமைச்சர்'' என கூறியதும் டிரைவர், கண்டக்டர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ''இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பஸ்சை நிறுத்தி உணவருந்தி விட்டு எடுத்து செல்லுங்கள்'' என்று அமைச்சர் அறிவுரை வழங்கினார்.