
சென்னை,
இன்றைய இளம்பெண்கள் பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். முகம் தெரியாத நபர்களுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் யார் என்றே தெரியாத முகம் தெரியாத ஆண்களுடன் பழகி தவறான வழிகளுக்கும் சென்று விடுகிறார்கள். இதுபோன்ற பெண்களை குறிவைத்து வாலிபர்கள் பலர் போலியான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை தொடங்கி வலை விரித்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.அந்தவகையில் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலில் பழகிய தூத்துக்குடி வாலிபர் ஒருவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை நெற்குன்றம் பகுதியை சேந்த பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழகத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவதை வழக்கமாகி கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் வேறு யாருடனும் தொடர்பில் இருக்க கூடாது. என்னிடம் மட்டுமே பேச வேண்டும் நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் எனக்கூறி தனது கட்டுபாட்டுக்குள் நெற்குன்றம் பெண்ணை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணின் வாட்ஸ்-ப்புக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி அதுபோன்று செயல்பட வேண்டும் எனவும் அவர் மிரட்டி இருக்கிறார். தனக்கு 2 மகள்கள் இருப்பதால் பயந்துபோன பெண், தூத்துக்குடி வாலிபருடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இருப்பினும் தூத்துக்குடி வாலிபர் பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு என்னுடன் உங்கள் தங்கை தொடர்ந்து தொடர்பில் இல்லாவிட்டால் அவரது புகைப்படங்களையும் இரண்டு மகள்களின் போட்டோக்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என்று கூறி தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால் எதற்கும் அந்த பெண் சம்மதிக்காததால் மகள்களை கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்துபோன நெற்குன்றம் பெண் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணுக்கு ஆபாச தொல்லை கொடுத்த வாலிபரின் உண்மையான பெயர் கோபி என்பது தெரியவந்தது. தூத்துக்குடி நியூகாலனி முனியசாமிபுரம் பகுதியை சேர்ந்த அவர் சரவண விக்ரம் என்ற பெயரில் நிற்குன்றம் பெண்ணுடம் பழகி பாலியல் மிரட்டல் மற்றும் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று கோபியை கைது செய்து விசாரணை நடத்தினர்.கைதான வாலிபர் கோபி 5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஆகியவற்றை போலியாக பல பெயர்களில் உருவாக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.கடந்த 3 ஆண்டுகளாக அவர் இதுபோன்று பெண்கள் பலருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தநிலையில்தான் சென்னை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.பெண்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் ஆகிய பக்கங்களுக்கு நண்பர் ஆவதற்கான பரிந்துரை செய்வதை வழக்கமாக வைத்துள்ள கோபி, பெண்களுடன் பழகத்தொடங்கிய பிறகு அவர்களை ஆபாச வலையில் வீழ்த்தி உள்ளார்.
தனது 11 போலியான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாக10க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் மன்மத ஆபாச லீலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக வாலிபர் கோபியை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகே அவர் எத்தனை பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.