
மதுரை,
நேற்று நடந்த முருக பக்தர் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "முருக பக்தர் மாநாட்டுக்கு எத்தனையோ தடைகள் வந்தன. எப்படியாவது இந்த மாநாட்டை தடுக்க வேண்டும் என்றும் பலர் நினைத்தார்கள். ஆனால் அதனை எல்லாம் மீறி முருகனின் ஆசியுடன் லட்சக்கணக்கானவர்கள் இந்த மாநாட்டில் கூடியுள்ளனர். நமது வாழ்வியலை இங்கே காண முடிகிறது. தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்தும் ஒருமித்த கருத்துகளை கொண்டவை. இந்த கூட்டத்தில் பங்கேற்றதன் மூலமாக சொர்க்கபுரியில் இருப்பதாகவே உணர்கிறேன். ஒரு விதமான தெய்வீக உணர்வையும் இந்த மாநாடு ஏற்படுத்தி இருக்கிறது" என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து முருக பக்தி பாடல்களையும், திருப்புகழ் பாடலையும் நயினார் நாகேந்திரன் பாடினார்.
முருக பக்தர் மாநாட்டில் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் 44 ஆயிரம் கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 344 கோவில்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இதில் எங்காவது அறநிலையத்துறை ஒழுக்கத்துடன் செயல்படுகிறதா?.
நம்முடைய முன்னோர்கள் கலாசாரம், பண்பாடு, கோவில்கள், பழக்க வழக்கங்கள் ஆகிய வாழ்வியல் முறையை பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்தனர். அவர்களைப் போல நாமும் அவற்றை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை நாம் ஒரு கொள்கையாகவே இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த மாநாடு அரசியல் நோக்கத்திற்கானதல்ல. நமது வாழ்வியலை மீட்டு எடுத்து உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இனி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன்பு, பின்பு என்றுதான் அரசியல், வரலாறு இருக்கும்.
உலகம் முழுவதிலும் 230 கோடி கிறிஸ்தவர்களும், 200 கோடி இஸ்லாமியர்களும், 190 கோடி மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்களாகவும் இருக்கிறார்கள். 120 கோடி இந்து மக்கள் உலகம் முழுவதிலும் வசிக்கிறார்கள் 2050-ம் ஆண்டில் முஸ்லிம்கள் பெருவாரியாக உலகம் முழுவதும் இருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அந்தவகையில் இந்துக்களின் மக்கள்தொகை குறையாத அளவிற்கு பார்த்துக் கொள்வது நம் கடமை.
உலக மக்கள்தொகையில் 0.2 சதவீதம் மக்கள்தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டினர், அண்டை நாடுகளான 4 நாட்டுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகின்றனர். பஹல்காமில் இந்து என்பதற்காகவே அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்றனர். இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்சினை.
பள்ளி செல்லும் குழந்தைகள் தைரியமாக திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து செல்ல வேண்டும். இந்த மாநாட்டில் கூடியுள்ள கூட்டம் பலருக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.