
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெரு வழியாக தேரடி வீதி வரையில் நீண்டு காணப்பட்டது. மேலும் வெளிமாநில பக்தர்கள் பலர் வரிசையில் செல்லாமல் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அம்மணி அம்மன் கோவிலும் முன்பு திரண்டு நின்றனர். அவ்வப்போது போலீசார் அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் சிலர் இடையில் புகுந்த சமயங்களில் பக்தர்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் நேற்று பகலில் வழக்கம் போல் பரவலான வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பக்தர்கள் பலர் கையில் குடை பிடித்தபடி வரிசையில் சென்றனர். கோவிலில் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.