
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் (வயது 21). இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்த சூதாட்ட செயலியில் பணத்தை கட்டி இழந்துள்ளார்.
இதனிடையே, சங்கரெட்டி பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (வயது 48) என்ற பெண் கடந்த 25ம் தேதி வீட்டில் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த 8 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ராணிமாவின் மகன் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட பணம் இல்லாததால் பிரசாந்த் வீட்டில் தனியாக வசித்து வந்த ராணிமாவை கொலை செய்தது நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரசாந்தை கைது செய்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட 8 சவரன் நகை, ரூ. 3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.