பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்; தந்தை அதிர்ச்சி பேட்டி

1 day ago 7

குருகிராம்,

அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார். இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்தது. அவரை விமர்சித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டனர். சிலர் அவரை அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். மன்னிப்பும் கோரினார்.

எனினும், கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பயந்து போன அவர், குடும்பத்துடன் தலைமறைவானார். அவருக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது. இந்த சூழலில் அவரை குருகிராமில் வைத்து, போலீசார் கைது செய்தனர்.

அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ, மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்ற வகையிலும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பனோலிக்கு எதிராக புகார் அளித்த வஜாகத் கான் காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி அவருடைய தந்தை சாதத் கான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த ஞாயிற்று கிழமை இரவில் இருந்து அவனை காணவில்லை. பனோலி கைது செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து தொலைபேசி வழியே மிரட்டல்கள் வருகின்றன என்றார். எனக்கும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தன என்றார்.

கொல்கத்தா போலீசார் பனோலியை கைது செய்ததும், பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக புண்படும் வகையிலான பதிவுகளை வெளியிட்டு உள்ளார் என கூறி, வஜாகத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு உள்ளதே என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாதத், அவன் மதசார்பற்றவன். இந்துக்களை அவன் புண்படுத்தவில்லை என்றார். மகனின் சமூக ஊடகத்தின் முகப்பு பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

Read Entire Article