சென்னை: இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கம் ஆகியவை இணைந்து 3வது ‘தமிழ்நாடு சைக்கிள் லீக்-2025’ போட்டியை நடத்த உள்ளன. சென்னையில் இம்மாதம் 7, 8 தேதிகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் கோவை பெடல்ஸ், நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோ ரேசர், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சிசர், திருச்சி ராக்ஃபோர்ட் ரைடர்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ் என 8 தொழில் முறை அணிகள் பங்கேற்க உள்ளன. அதிக வெற்றிகளை குவிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
இதுதவிர யு12, யு 14, யு18, பொது என பல்வேறு வயது வகைகளில் ஆண்கள், பெண்கள் 2 பிரிவுகளாக போட்டிகளில் பங்கேற்கலாம். கலந்து கொள்ள விரும்புபவர்கள், www.tclracing.com என்ற இணையதளம் மூலமாக தகவல்களை பெற்று விண்ணப்பிக்கலாம். போட்டி நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, கொடி மர சாலை, ராஜாஜி சாலை வழியாக 3.5 கிமீ நீளம் கொண்டதாக அமையும்.
இது குறித்து தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் தலைவர் எம்.சுதாகர் கூறுகையில், ‘சைக்கிள் ஓட்டுதல் போட்டி தமிழ்நாட்டில் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. கடந்த முறை 500 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்த முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு தமிழ்நாடு அரசு, விளையாட்டுக்கு தரும் ஆதரவும், முக்கியத்துவமே காரணம்’ என்றார்.
The post ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; சென்னையை கலக்கும் சைக்கிள் லீக் போட்டிகள்: 7, 8 தேதிகளில் நடைபெறும் appeared first on Dinakaran.