
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத வழிபாட்டுக்காக நாளை (16-7-2025) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இதற்காக 11-ந்தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13-ந்தேதி இரவு சாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (17-ந்தேதி) முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இம்மாதம் 21-ந் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது. 21-ந்தேதி பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாற்றப்படுகிறது.