
கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர் கீழ வீதி பழனியாண்டர் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அர்ச்சனையுடன், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் திருவாரூர் பகுதியை சுற்றியுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.