ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி: கலெக்டர் தகவல்

2 weeks ago 3

திருவள்ளூர்: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் த. பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலாதுறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதம். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையான ரூ.95 ஆயிரத்தை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ வழங்கப்படும். மேலும் தனியார் விமான நிறுவனங்களிலும் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலாதுறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவைமையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவுசெய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article