ஆடைகளால் ஒருவர் யோகியாக முடியாது: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

2 months ago 8

லக்னோ: ஆடைகளால் மட்டும் ஒருவர் யோகியாக முடியாது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 2016 நவம்பர் 8ம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லாது என மோடி அரசு திடீரென அறிவித்தது. அப்போது உத்தரபிரதேசத்தில் பணத்தை மாற்றுதற்காக வங்கி வாசலில் நின்றிருந்த ஒரு பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு கஜாஞ்சி நாத் என பெயர் சூட்டப்பட்டது. குழந்தை கஜாஞ்சிநாத் தற்போது 8 வயது சிறுவனாக வளர்ந்துள்ளான். அவனது பிறந்தநாளை உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடி, சிறுவனுக்கு கட்சியின் சைக்கிள் சின்னத்தை பரிசளித்தார்.

பின்னர் பேசிய அகிலேஷ் யாதவ், “ஆடைகள் மட்டும் ஒருவரை துறவியாக மாற்ற முடியாது. ஒருவரின் பேச்சு, செயல்களே அவரை துறவியாக்கும். தன்னை விட வேறு யாரும் பெரிய ஆளில்லை என நினைப்பவர் எப்படி துறவியாக முடியும்? ஒரு துறவி என்பவர் குறைவாக பேசுகிறார். அந்த பேச்சும் பொதுநலனுக்கானது. ஆனால் இங்கே எல்லாமே எதிர்மறையாக உள்ளது. என்கவுன்டர் செய்பவர்களுக்கு கவுன்டவுன் தொடங்கி விட்டது. அவர்கள் இருக்கையில் இருக்கும் நாள்கள் எண்ணப்படுகின்றன” என முதல்வர் யோகி யை மறைமுகமாக தாக்கி பேசினார்.

The post ஆடைகளால் ஒருவர் யோகியாக முடியாது: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article