சென்னை: ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபணமானால், அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பாலியல் புகாரில் சிக்குபவர்கள் சில நாள் சஸ்பெண்ட் ஆகி ஜாமின் பெற்று வெளியே வந்துவிடுகின்றனர். மேலும், மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை தற்போது காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்க்க பாலியல் புகாரில் சிக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விதிகளை திருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம், காவல்துறை உள்ளிட்டோருடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தியது. பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பணியாளர்களுக்கான புதிய விதிகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் புகார் வந்தால் உடனே நேரடியாக ஆய்வு செய்ய செல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபணமானால் அவர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
The post ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபணமானால் கல்விச் சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! appeared first on Dinakaran.