
சென்னை,
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1-ந் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உளிளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது. குடும்பக் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து பேசியுள்ளார். அதில், "இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதை சொல்லும் போது என்ன செய்தாரோ, அதைத்தான் நான் செய்தேன். அதனால் தான் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இவ்வளவு பாராட்டுகள் கிடைத்தது. மேலும் இயக்குனர் அபிஷன் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவரது ரோல் படத்திற்கு இன்னும் உணர்வுபூர்வமான பலம் கொடுத்தது" என்று தெரிவித்துள்ளார்.