அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கேற்பு

4 months ago 11

 

அலங்காநல்லூர், ஜன. 10: அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி, நேற்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கைகளில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் செயல்பட்ட தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. இதனை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் ஆலையின் முன்னாள் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆலையை விரைவாக திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் கரும்புகளை கையில் ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் கதிரேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரன், தாலுகா தலைவர் மொக்கமாயன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்க பொருளாளர் அடக்கிவீரணன், செயலாளர் ராஜேஸ்வரன், துணைத் தலைவர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஆலையை உடனடியாக திறந்து செயல்பாட்டிற்கு ெகாண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article