அரைவேக்காட்டு தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் தாக்கு

1 week ago 10

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாமன்னர் ராஜராஜன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. தொடந்து 4 ஆண்டுகளாக காவிரி டெல்டா பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீரை திறந்து விடுகிறோம். மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் நேரில் வந்து திறந்து வைத்த முதல் முதல்-அமைச்சர் நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது திமுகதான். தஞ்சையையும், கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது; காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன்.

2024-ல் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் - மன்னார்குடி சாலைப் பணிகள் 90 சதவீதன் முடிந்துள்ளன. டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி விவசாயிகளுக்காக கார்- குறுவை சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்கப்படும்.

செய்திகளை பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்சினை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார் திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. பெட்டியின் சாவி தொலைந்துவிட்டதா என கேட்கிறார்; அவரது எண்ணம் பெட்டியில்தான் இருக்கிறது. கூட்டணிப் பிரச்சினைகளை மறைக்க அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப் பிறகாவது கவர்னர் ஆர்.என்.ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை. தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை பேரவையில் நிறைவேற்றி 40 நாட்களாக கவர்னர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சரின் மூன்று அறிவிப்புகள்:-

பூதலூர் வட்டத்தில் உயர் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

தென் பெரம்பூர் அருகே வெண்ணாறு மற்றும் வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும்.

ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். 

Read Entire Article