வீட்டோடு மாப்பிள்ளை.. மரியாதை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர செயல்

4 hours ago 1

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (வயது 46). தொழிலாளியான இவருடைய மனைவி பபிதா நித்ய செல்வி (39). இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் என்ற மகனும், 7 வயதில் டிக்ஸ்மெரின் என்ற மகனும் உள்ளனர். கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் தங்கியபடி பென்குரூஸ் படித்து வந்தான்.

இந்தநிலையில் டிக்ஸ்மெரின் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளான். இதனால் டார்வினும், பபிதா நித்ய செல்வி ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

நேற்று காலையில் இருந்து மாலை வரை டார்வின் வீடு பூட்டியே கிடந்துள்ளது. இரவான நிலையிலும் விளக்கு எதுவும் அந்த வீட்டில் எரியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பபிதா நித்ய செல்வி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். கணவர் டார்வின் ஒருவித பதற்றத்துடன் இருந்துள்ளார். இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் டார்வினை பிடித்து போலீசார் விசாரித்த போது, மனைவியை அவரே கொன்று விட்டு மாலை வரை பிணத்துடன் வீட்டிலேயே பதுங்கியிருந்தது தெரியவந்தது.

அதிகாலையில் கணவன், மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டார்வின், பபிதா நித்ய செல்வியை கழுத்தை நெரித்தும், துணியால் கழுத்தை இறுக்கியும் கொன்றுள்ளார். ஆத்திரத்தில் மனைவியை கொன்று விட்டோமே, இனி வெளியே சென்றால் போலீசார் பிடித்து விடுவார்களே என்ற அச்சம் டார்வினுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டுக்குள்ளேயே மனைவி பிணத்துடன் காலையில் இருந்து மாலை வரை இருந்துள்ளார். அந்த சமயத்தில் பித்து பிடித்ததை போன்று அங்குமிங்குமாக நடந்துள்ளார். கொலையை மறைத்து விடலாமா? என்ற எண்ண ஓட்டமும் அவருக்கு தோன்றியது. இதனால் இரவு நேரத்தில் மனைவி உடலை எடுத்துச் சென்று மறைவான பகுதியில் வீசி விடலாம் என்ற எண்ணத்தில் புலம்பியிருக்கலாம் என தெரிகிறது.

ஆனால் இரவானதும் வீட்டில் விளக்கு போடாததால் சந்தேகப்பட்டு பொதுமக்கள் வந்ததால், டார்வின், மனைவியை கொன்ற சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் கொலையை மறைக்க டார்வின் தீட்டிய திட்டமும் முறியடிக்கப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டார்வினை போலீசார் கைது செய்தனர். அதே சமயத்தில் மனைவியை கொன்றது ஏன்? கொன்ற பிறகு உடலுடன் வீட்டில் பதுங்கியது ஏன்? என்பது தொடர்பாக எழுந்த கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள போலீசார் டார்வினின் வாக்குமூலத்தை பெற தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மனைவியை கொன்றதாக டார்வின் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனைவியை கொன்ற கணவர், உடலுடன் நாள் முழுவதும் வீட்டில் இருந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Read Entire Article