
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. கூட்டணி குறித்து மத்திய மந்திரி அமித்ஷா மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். இந்தியா கூட்டணியில் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக உள்ளது. அதேபோல் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி தான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியா அல்லது அ.தி.மு.க. தலைமையில் தமிழ்நாட்டில் தனி கூட்டணியா என்ற தெளிவும் தேவைப்படுகிறது. ஆகவே கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். பா.ம.க. தலைவர் ராமதாஸ், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது கூட்டணி தொடர்பான சந்திப்பா என்றும் தெரியாது. யூகத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.