*அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.54.83 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் 3 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 35 பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.54.83 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகள், ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.3.36 கோடி மதிப்பீட்டிலான பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி, செந்துறை ஊராட்சி ஒன்றியம், நமங்குணம் ஊராட்சியில் ரூ.63.41 லட்சம் மதிப்பீட்டில் நமங்குணம் முதல் பழமலைநாதபுரம் வரை தார் சாலை, பழமலைநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், ந.பாலையூர் நடுத்தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, ந.குடிகாடு பொது இடுகாட்டில் ரூ.4.36 லட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை, ந.குடிகாடு எம்.ஜி.ஆர் நகரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை நமங்குணம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை நமங்குணம் திருவள்ளுவர் நகரில் 1996ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை மாற்றி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை, நமங்குணம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
பின்னர், நமங்குணம் ஊராட்சியில் ரூ.23.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் கூட்டுறவு சங்க கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, நமங்குணம் ஊராட்சியில் ரூ.11.79 லட்சம் மதிப்பீட்டில் நமங்குணம் மெயின்ரோடு முதல் குடிகாடு மெயின்ரோடு வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து சொக்கநாதபுரம் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கல்வெர்ட் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
பின்னர், சொக்கநாதபுரம் கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து நக்கம்பாடி, செந்துறை, பொன்பரப்பி ஊராட்சியில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகள் என மொத்தம் 3 கோடியே 36 இலட்சம் மதிப்பிலான 31 புதிய பணிகள் மற்றும் 4 முடிவுற்ற திட்டப்பணிகளையும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, உதவி இயக்குநர் பழனிசாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ரவி மற்றும் இதர அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் அரசின் திட்டப் பணிகள் appeared first on Dinakaran.