தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மும்பையில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர் பின்னர் மும்பைக்கு செல்ல தயாரானார். அதாவது, தென்காசிக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மதுரைக்கும், பின்னர் அங்கிருந்து மும்பைக்கு செல்ல இருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் ஊரில் இருந்து தென்காசி ரெயில் நிலையத்திற்கு சென்றார். ஆனால் தாமதமாக சென்றதால், ரெயில் புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது, அவர் மது அருந்தி இருந்ததாகவும், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து, கண்டக்டரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அந்த பஸ் கண்டக்டர், சிறுவனை பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடுவழியில் இறக்கிவிட்டு சென்றார் இதனால் விரக்தி அடைந்த அந்த சிறுவன் பஸ் நிலையத்திற்கு வந்தார். இந்த பஸ் எப்படியும் திரும்பி இதே வழியாகத்தான் வர வேண்டும் என்று கருதி காத்துக் கொண்டு இருந்தார்.
சில மணி நேரங்களில் பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு இயக்கப்படும் அரசு பஸ் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வந்தது. அதில் கண்டக்டராக அம்பையைச் சேர்ந்த மாடசாமி (வயது 50) என்பவர் கீழே இறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது, நம்மை கீழே இறக்கி விட்ட கண்டக்டரும், பஸ்சும் தான் நிற்கிறது என நினைத்து அந்த சிறுவன், கண்டக்டரிடம் தகராறு செய்தார்.
அப்போது, அந்த சிறுவன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மாடசாமியின் கழுத்தில் குத்த முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் தடுக்க முயன்ற போது, அவரது காதில் கத்தரிக்கோல் குத்து விழுந்தது. தசை கிழிந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த சிறுவனை பிடித்து பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அதில் தன்னை நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் என நினைத்து மாடசாமியை தாக்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.