அமைச்சர் பொன்முடியைப் பின்பற்றி, அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகமும் 2026 தேர்தலில் பாதுகாப்பான தொகுதிக்கு இடம் மாறுகிறார் - தற்போது விழுப்புரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். திக பேச்சாளராக இருந்த பேராசிரியர் க.தெய்வசிகாமணி என்கிற பொன்முடியை உட்கட்சி புகைச்சலை சமாளிப்பதற்காக 1989-ல் விழுப்புரம் தொகுதியில் நிறுத்தியது திமுக தலைமை.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான அப்துல் லத்தீபை சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பொன்முடி. அடுத்த தேர்தலில் ராஜீவ் அலையால் விழுப்புரத்தில் பொன்முடியால் ஜெயிக்க முடியாமல் போனது. அதேசமயம், 1996-ல் அதே விழுப்புரத்தில் சுமார் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக-வை வீழ்த்தினார். 2001, 2006 தேர்தல்களிலும் விழுப்புரத்தை தக்கவைத்த பொன்முடி, 2011-ல் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்திடம் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விழுப்புரத்தைப் பறிகொடுத்தார்.