
சென்னை,
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 15 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதுமெனவும், கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றார். ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 22 -ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.