சென்னை: அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் பக்கத்துக்கு பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டை பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் – ரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன், எது தடுக்கிறது?
பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தை பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்கு பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?
ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையை குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்கு சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.
வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பாஜவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதோ, எங்கு பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு அவர் கூறியுள்ளார். எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதோ, எங்கு பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?
The post அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் தமிழ்நாட்டுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுகிறது நிதிநிலை அறிக்கையில் மட்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.