
'அருந்ததி' என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.
தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஒரு சில காரணத்தால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 'காதி' பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 'காதி' படத்தின் தரத்தை மேம்படுத்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அடுத்த வெளியீடு தேதி எப்போது உள்ளிட்ட விவரங்களை விரைவில் படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.