அந்தியூர் அருகே ஏரியில் மூழ்கி இறந்த முதியவர் உடல் மீட்பு

4 months ago 14

 

அந்தியூர், டிச.10: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ராமசாமி (62). இவர் சங்கராப்பாளையம் அடுத்த வள்ளலார்புரத்திலுள்ள சேகர் என்பவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காலை அங்கு சென்ற உறவினர்கள் தோட்ட உரிமையாளரிடம் கேட்டபோது, வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

ராமசாமியை காணாமல் தேடியபோது, கெட்டிசமுத்திரம் வடக்கு ஏரிக்கரை பகுதியில் அவரது செல்போன், செருப்பு, வேட்டி ஆகியவற்றை கண்டனர். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கெட்டி சமுத்திரம் ஏரியில் குளிக்க சென்றபோது மாயமாகியிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார், அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து, நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் மாலை 6.30 வரை ஏரியில் தேடி கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்றுக்காலை அவரது உடல் கெட்டி சமுத்திரம் ஏரி பகுதியில் மிதந்து கிடந்ததை பார்த்து மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அந்தியூர் அருகே ஏரியில் மூழ்கி இறந்த முதியவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article