அதிமுக பிரமுகர் கொலை: எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேட முயற்சி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

6 hours ago 2

சென்னை,

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணனை கொலை செய்தவரே குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக்கொண்டு கைதாகிய நிலையில், உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த தகராறை வைத்து அதை திமுகவுடன் முடிச்சுப் போடும் ஈனச்செயலை செய்ய முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

"முத்து பாலகிருஷ்ணனுக்கும், சவுந்திரராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால், அவர் தான் லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டதாக முத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தியதில், திட்டமிட்டு கொலை நடந்தது தெரியவந்தது" என செய்தி வெளியானதை எடப்பாடி பழனிசாமி படிக்கவில்லை போலும்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் பைக்கில் சென்றபோது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் பலியானார்.

லாரி ஓட்டுநர் சவுந்திரராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த முத்து பாலகிருஷ்ணன் வஞ்சகம் செய்து ஏமாற்றியதால் டிப்பர் லாரி ஏற்றி கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுநர் சவுந்திரராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம்பரம்பு கிராமத்தில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை தற்போது கைதாகியுள்ள லாரி ஓட்டுநர் சவுந்திரராஜன் அனுபவித்து வந்துள்ளார். 650 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தில் கல் குவாரி இருப்பதால் அதை வைத்து டிப்பர் லாரி மூலம் பொருட்களை சவுந்திரராஜன் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் அந்த நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்து பால்ராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார். தான் அனுபவித்து வந்த நிலத்தை தனக்கு தகவல்கூட தெரிவிக்காமல் விற்பனை செய்து ஏமாற்றியதாக கருதிய சவுந்திரராஜன், அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார்.

அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் அவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில். அதனால் பாதிக்கப்பட்ட சவுந்திரராஜன் பலிதீர்க்கவே லாரி ஏற்றிக்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது ஊடகச் செய்திகளில் தெளிவாக வெளியாகியுள்ள நிலையில், "திமுக ஆட்சியில் அதிமுக பிரமுகரை கொலை செய்தது திமுக பிரமுகர்" என்று பேசினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற தீய எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் பற்றி அவதூறை விதைக்க முயற்சிக்கிறார்.

கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கருணாகரனின் மனைவி கவுரி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரை எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் தனது மனைவியை நிறுத்தியுள்ளார். அப்போது சில சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதை வைத்து அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலையை திமுக பிரமுகர் கருணாகரன் மீது சுமத்துவது எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயக் கணக்கு போட்டுள்ளார்.

முத்து பாலகிருஷ்ணன் மரண வழக்கு போலீஸ் விசாரணையில் இருக்கும்போதே எடப்பாடி பழனிசாமி திமுக பிரமுகரை இதில் சம்பந்தப்படுத்தி பேசுவது திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கேவலமான எண்ணம்.

ரியல் எஸ்டேட் தொழில் விரோதத்தால் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலையான நிலையில், "தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலை" என்று சொல்வது மோசடி, ஏமாற்றுதல், பாலியல், போதைப்பொருள், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் அதிமுக பிரமுகர்களை புனிதர்களாக காட்ட எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதை காட்டுகிறது.

"சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற அவதூறுக்கு ஆதாரம் தேடி தோற்றுப்போன பழனிசாமி இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ளார். இதிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article