அதிமுக - பாஜக கூட்டணியால் திமுக அச்சத்தில் உறைந்துள்ளது - எல்.முருகன்

1 day ago 5

சென்னை,

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மாவட்டம் தோறும் வாரிசு அரசியலை வளர்த்து, குட்டி ஜமீன்தாரர்களாக வலம் வரும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் இது மகிழ்ச்சி தான். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிய குடும்ப அரசியலை ஏற்றுக்கொண்ட திமுக-வினருக்கு, தற்போது மு.க.ஸ்டாலின் செய்து வரும் குடும்ப அரசியலைய ஏற்றுக் கொள்வதிலும், இளவரசருக்கு துதி பாடுவதிலும் எந்த வெட்கமோ, வேதனையோ இருக்கப் போவதில்லை.

குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அரசியல், அரசு என மன்னராட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியில் திளைக்கிறார். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக இந்த கொடூர குடும்ப ஊழல் ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்கள் தான் செய்வதறியாது தவிக்கின்றனர். இமாலய ஊழல் செய்து, பணம் குவித்து, அதனை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடித்து, மீண்டும் கணக்கு வழக்கில்லாமல் ஊழல் செய்து பணம் குவித்து உலகப் பணக்காரர்களாக தனது குடும்பத்தினரை வலம் வரச் செய்த விஞ்ஞான ஊழலுக்கு சொந்தக்காரர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

இந்த தொட்டுத் தொடரும் கருணாநிதியின் விஞ்ஞான ஊழல் பாரம்பரியம், தற்போதைய திமுக ஆட்சியில் அஞ்சாத ஊழலமாக உருமாறிப் போயுள்ளது. தனது மகனுக்காக நடத்தப்பட்ட இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் வேடிக்கையாக இருக்கின்றன. பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி விட்டால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்குப் போடுகிறார் மு.க.ஸ்டாலின். தனது மகன் தான் இளவரசர், அவர் தான் கட்சியின் எதிர்காலம், அவர் இடும் கட்டளைகளை ஏற்று திமுகவினர் நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் தீர்மானம்.

ஏன் இந்தப் பொதுக்குழு என்பதற்கு அவர்கள் நிறைவேற்றிய தீர்மானமே சான்று. முன்னாள் முதல்வர் கருணாநிதின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவிக்க கோரி தீர்மானம். ஏன், அதற்கு முன்பு தமிழ் செம்மொழியாக இருக்கவில்லையா? வான்புகழ் வள்ளுவன் தொடங்கி, தமிழின் அடையாளமாக விளங்கிய பலரும் இருக்கிறார்களே! தமிழ்- தமிழ்நாடு என்றாலே, திமுகவினருக்கு கருணாநிதி என்று அர்த்தம் போலும். தமிழகத்தை கருணாநிதி நாடு என அறிவித்து விடுங்களேன். இந்தப் போலி திராவிட மாடல் ஆட்சியில் உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என ஒவ்வொரு தரப்பு மக்களும் படும் துயரங்கள் ஏராளம். இந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணற்றவை. இந்தக் கொடூரத்திற்கு பெயர் தான் திராவிட மாடலா?

இந்தி திணிப்பை கைவிட வேண்டும், கீழடி ஆய்வை மத்திய அரசு வெளியிட மறுக்கிறது என்று வழக்கமான பல்லவியைப் பாடி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இல்லாத ஒன்றை வைத்து பூச்சாண்டி அரசியல் செய்வது திமுகவினரின் வாடிக்கை. மத்திய அரசு மீது குற்றம் சுமத்த ஏதும் இல்லை என்பதால் இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்பப் போவதில்லை. இந்தக் கொடூர திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல, இரண்டல்ல.. மக்களை சுரண்டி, கொள்ளையடித்து, திமுக குடும்பம் மட்டுமே குதூகலமாக வாழும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தமிழக மக்கள் எப்போதோ தயாராகி விட்டார்கள். அதற்கு முரசறைந்து உலகிற்கு அறிவிக்கும் நாள் தமிழக சட்டமன்ற தேர்தல்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வரலாறு காணாத மகத்தான வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும். மக்கள் பணத்தை சுருட்டி ஒய்யார வாழ்வு வாழும் திமுகவினர், படுதோல்வியை தழுவி செய்த தவறுகளுக்காக தண்டனை பெற்று சிறைக்கு செல்வதும் நடக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைத் தர, 2026 சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article