அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

1 week ago 3

ஈரோடு,

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இருந்து வருகிறார். மேலும் இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும். தற்போது கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்ட குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்னூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை. இதனால் அந்த விழாவுக்கு நான் செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் எம்.ஜி.ஆரின், பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கிய போது பல்வேறு சோதனைகள் இருந்தது. இன்று பிறந்தநாள் காணுகிறோம் என்று சொன்னால் அந்த தலைவனுக்கு வந்த சோதனை எந்த தலைவருக்கும் வந்திருக்காது. நான் எத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எத்தனை தலைவர்களை சந்தித்து விட்டு இந்த களத்தில் நிற்கிறேன் என்பதும் மக்களுக்கு தெரியும். வந்திருப்பவர்கள் ஏதாவது கிடைக்குமா என நினைக்கிறீர்கள். கிடைக்காது. கவலைப்பட தேவையில்லை. நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாதை. எனது வழி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவும் காட்டிய வழிதான். அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் நின்று பேசி இருக்க இயலாது எனப் பேசியிருந்தார்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,

இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம். மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். மக்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கம் ஜெயலலிதா. அவர் சொன்னது போல் மக்களால் நான் மக்களுக்காக நான் என வாழ்ந்த தாரக மந்திரத்தில் உங்களுக்காக நான் உங்களுக்காகவே நான். எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்.

இல்லாத நிலை வேண்டும் என்று உழைத்தார். அமைதி வளம் வளர்ச்சி என்று தாரக மந்திரத்தோடு உழைத்த ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்காக மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார். இது சோதனை என்று யாரும் சொல்ல வேண்டாம். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உழைத்துக் கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவம் தான் எடப்பாடி பழனிச்சாமி என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு மற்ற கட்சிகளை குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறையை சுதந்திரமாக விட்டால் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

குடும்பத்தில் அண்ணன், தம்பிக்குள் நடைபெறும் சண்டை போல அதிமுகவில் பிரச்சினை நிலவுகிறது, அண்ணன், தம்பி சண்டைகள் சரியாவது போல அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளும் சரியாகி விடும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கூறினார்.

இந்தநிலையில், ஈரோடு அத்தானியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

இந்த முறை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். 2026-ல் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். செங்கோட்டையன் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article